
காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது.
அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
இதனிடையே, பணய கைதிகள் விடுதலை, இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சி மேற்கொண்டார்.
அதன் பயனாக போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல், ஹமாஸ் சம்மதம் தெரிவித்தன.
ஒப்பந்தப்படி காசா முனை மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். இதையடுத்து, 72 மணிநேரத்தில் இஸ்ரேலிய பணய கைதிகள் அனைவரையும் ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டும்.
அதன்படி, உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பணய கைதிகள், கொல்லப்பட்ட 28 இஸ்ரேலிய பணய கைதிகளின் சடலங்களை ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதற்கு ஈடாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 2 ஆயிரத்து 250 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவர்.
இந்நிலையில், காசா முனையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் மந்திரி சபை இன்று (10) ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, காசாவில் போர் நிறுத்தம் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

