
சீரற்ற வானிலை ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 474 ஆக உயர்வு
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அதனால் உருவான அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இன்று (03) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, இன்னும் 356 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கையில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 25 மாவட்டங்களில் 448,817 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,586,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்காக நாடு முழுவதும் 1,385 பாதுகாப்பு முகாம்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் 53,758 குடும்பங்களைச் சேர்ந்த 201,875 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சொத்து சேதங்களைப் பொறுத்தவரையில், 971 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் 40,358 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இன்னும் பல பகுதிகளில் வெள்ளத்தால் பாதிப்பு நீடித்து வருவதால், அதிகாரிகள் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறார்கள்.

