
சீரற்ற வானிலை ; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் நேற்று (03) மாலை 7.00 மணிக்கு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
அறிக்கையின்படி, அனர்த்த சூழ்நிலையில் 341 பேர் காணாமல் போயுள்ளனர். இதுவரை கிடைத்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில், 25 மாவட்டங்களில் 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களை தங்க வைக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 1,231 பாதுகாப்பு முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களில் தற்போது 51,023 குடும்பங்களைச் சேர்ந்த 171,778 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சொத்து சேதங்கள் தொடர்பாக, 2,303 வீடுகள் முழுமையாகவும் 52,489 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

