
ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
பல்கலைக்கழகச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் இன்று (30) அனைத்துப் பணிகளிலிருந்தும் விலகி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நாலக கீகியனகே இதுகுறித்து தெரிவிக்கையில், பல்கலைக்கழகச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் தற்போது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதற்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார்.
குறித்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது என்றபோதிலும், அதற்கு முன்னரே நடைமுறைப்படுத்த முற்படுவது பல்கலைக்கழகங்களின் சுயாதீனத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்திற்கு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஆதரவு வழங்குவதாகவும் பேராசிரியர் நாலக கீகியனகே தெரிவித்தார்.

