
றமழான் கால பேரீச்சம்பழ இறக்குமதிக்கு வரிச்சலுகை
றமழான் நோன்புக் காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கு வரிச்சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இஸ்லாமியர்கள் றமழான் நோன்புக் காலத்தில் விசேட உணவாக பயன்படுத்தும் பேரீச்சம்பழம், ஆண்டுதோறும் இராஜதந்திர மட்டத்திலும், பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மூலமாகவும் நன்கொடையாக அல்லது அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருவதுடன், வெளிநாட்டு செலாவணிச் செலவுகள் ஏற்படாத வகையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படுகின்றது.
அடுத்துவரும் றமழான் நோன்புக் காலம் 2026 பெப்ரவரி 19 அன்று ஆரம்பித்து, மார்ச் 21 அன்று நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, றமழான் நோன்புக் காலத்தில் நன்கொடையாகவும் அன்பளிப்பாகவும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கு வரிச்சலுகை வழங்குவது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

