
66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகல்
66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.
அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படும் 35 ஐக்கிய நாடுகள் சபைக்கு அப்பாற்பட்ட அமைப்புகள் மற்றும் 31 ஐக்கிய நாடுகள் சபை அமைப்புகளுக்கு நிதி வழங்குவதையும், அவற்றுடன் தொடர்புகளை பேணுவதையும் நிறுத்துமாறு அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஐ.நா. பருவநிலை ஒப்பந்தம் உள்ளிட்ட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு இனி சேவை செய்யாததாகக் கருதப்படும் அமைப்புகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா விலகியுள்ள அமைப்புகளில், ஐக்கிய நாடுகள் பருவநிலை ஒப்பந்தம், இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து வழிநடத்தும் தூய்மையான எரிசக்தி முன்னெடுப்பான சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழு உள்ளிட்ட முக்கிய சர்வதேச அமைப்புகளும் இடம்பெறுகின்றன.
இந்த முடிவு சர்வதேச அரங்கில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அதன் அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்து பல தரப்புகளும் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

