
ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று (12) முதல் மீண்டும் நடைபெறவுள்ளன.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்ததாவது, குறித்த பரீட்சைகள் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாகும்.
நாடு முழுவதும் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதுடன், இதற்காக 325 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் 32 பிரதேச மத்திய நிலையங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளன.
அனர்த்த நிலைமை காரணமாக தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டை இழந்துள்ள பரீட்சார்த்திகள், தற்காலிக அடையாள ஆவணங்களைச் சமர்ப்பித்து பரீட்சைக்கு தோற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்ட கால அட்டவணையின் அதே நேரங்களிலேயே பரீட்சைகள் நடைபெறும் என்றும், பரீட்சை ஆரம்பமாவதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

