
இந்தோனேசியாவில் சிறிய ரக விமானம் மாயம்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து, அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்குச் சென்ற சிறிய ரக விமானம் நேற்று மதியம் புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விமானத்தில் மொத்தம் 11 பேர் பயணம் செய்திருந்தனர்.
இந்நிலையில், தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலைப்பாங்கான பகுதியில் விமானம் பறந்துகொண்டிருந்த தருணத்தில் இந்த தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து மாயமான விமானத்தை கண்டறியும் நடவடிக்கையில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதுடன், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கும் வரை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

