
புனரமைப்புக்குப் பின் லக்விஜய மின் உற்பத்தி இயந்திரங்கள் அனைத்தும் மீண்டும் செயற்பாடு
புனரமைப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழந்திருந்த நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் தற்போது தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன் மூலம் 900 மெகாவொட் மின்சாரம் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த நவம்பர் 03ஆம் திகதி வழமையான பராமரிப்பு பணிகள் காரணமாக லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு இயந்திரம் நிறுத்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 20ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மற்றுமொரு இயந்திரமும் செயலிழந்தது.
இந்நிலையில், குறித்த இரண்டு இயந்திரங்களும் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் தற்போது மீண்டும் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

