
50 பள்ளத்தில் விழவிருந்த பஸ்ஸை உடனடியாக செயற்பட்டு 40 உயிர்களை காப்பாற்றிய சாரதி
வாலப்பனை இலங்கை போக்குவரத்துக் சபை (SLTC) டிப்போவைச் சேர்ந்த பஸ் ஒன்று நில்தண்டாஹின்னயிலிருந்து தெரிபெஹே வரையிலான பயணத்தின் போது ராசிங்கொல்லையில் உள்ள முதல் வளைவில் கட்டுப்பாட்டை இழந்தபோது பஸ்ஸின் சாரதி உடனடியாக செயற்பட்டு பஸ்ஸை நிறுத்தியதால் 40 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.
டித்வா சூறாவளி காரணமாக நிலச்சரிவு ஏற்பட்ட வீதியின் ஒரு வளைவில் நேற்று பஸ் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது.
சாரதி உடனடியாக செயற்பட்டிருக்காவிட்டால் பஸ் சுமார் 50 அடி பள்ளத்தாக்கில் விழ நேர்ந்திருக்கும் என வாலப்பனை டிப்போவின் செயல்பாட்டு பொறுப்பாளர் பண்டாரா தெரிவித்தார்.
விபத்து குறித்து கருத்து தெரிவித்த பேருந்து ஓட்டுநர் சமன் திலகசிறி
“ காலை நேரத்தில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் நில்தண்டாஹின்னிலிருந்து தெரிபஹாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது ராசிங்கொல்ல பகுதியில் உள்ள வளைவில் இடி போன்று பலத்த சத்தம் கேட்டது.
நான் பிரேக்கை அழுத்தி பஸ்ஸை நிறுத்தினேன்.
பஸ்சிற்கு கீழே 50 அடி உயரமான பாறை மற்றும் ரூபாஹாவீதி தெரிந்தது. விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். நான் பஸ்ஸை நிறுத்திவிட்டு வெளியே வந்த பார்த்த போது, பஸ்ஸின் இணைப்பு இரண்டாக உடைந்திருந்தது.”
என கூறினார் .

