
சமனில் முடிந்த போட்டி: இரண்டாவது சூப்பர் ஓவரில் தென்னாபிரிக்க அணி திரில் வெற்றி !
ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 13ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி இரண்டாவது சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
குறித்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின.
அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது.
இந்தநிலையில் 188 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை பெற்றது.
ஓட்ட எண்ணிக்கையை ஆப்கானிஸ்தான் அணி சமன் செய்தமையால் வெற்றியை தீர்மானிப்பதற்கு போட்டி சுப்பர் ஓவர் சுற்றுக்கு சென்றது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து 18 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 1 விக்கெட்டினை இழந்து 17 ஓட்டங்களை பெற்று மீண்டும் போட்டியை சமப்படுத்தியது.
பின்னர் மீண்டும் போட்டி இரண்டாவது சுப்பர் ஓவருக்கு சென்றது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 23 ஓட்டங்களை பெற்றது.
இந்தநிலையில் 24 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 19 ஓட்டங்களை பெற்று தோல்வி அடைந்தது.

