இலங்கை அணி மீண்டும் ஒரு உலகக்கிண்ணத்தை வெல்லும் – லசித் மாலிங்க  நம்பிக்கை

இலங்கை அணி மீண்டும் ஒரு உலகக்கிண்ணத்தை வெல்லும் – லசித் மாலிங்க நம்பிக்கை

இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பதோடு, தேசிய அணிக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் லசித் மாலிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மற்றுமொரு ஐசிசி உலகக்கிண்ணத்தை இலங்கை வெல்வது சாத்தியமான ஒன்று என்ற தனது முகநூல் பதிவு ஒன்றில் உருக்கமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

1996ஆம் ஆண்டு இலங்கை அணி முதன்முறையாக உலகக்கிண்ணத்தை வென்றது முதல் கடந்து வந்த வரலாற்றுப் பயணத்தை மாலிங்க நினைவு கூர்ந்துள்ளார்.

சில தொடர்களில் ஆரம்பத்திலேயே வெளியேறியமை மற்றும் நான்கு உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்தமை போன்ற ஏமாற்றங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான கடினமான காலங்களிலும், விமர்சனங்களுக்கு மத்தியிலும் உண்மையான ரசிகர்கள் அணியுடன் உறுதியாக நின்றதை அவர் பாராட்டியுள்ளார்.

அன்றைய ரசிகர்களின் தளராத பொறுமையும் நம்பிக்கையுமே 2014ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக்கிண்ணத்தை (T20) வெல்வதற்கு வழிவகுத்தது.

“1996 முதல் 2014 வரையான அந்த 18 ஆண்டு கால போராட்டங்களை சகித்துக்கொண்டவர்கள், விடாமுயற்சியும் விசுவாசமும் ஒருநாள் வெற்றியைத் தரும் என்பதை நிரூபித்துள்ளனர்.

இலங்கை அணி மீண்டும் ஒரு உலகக்கிண்ணத்தை வெல்லும் என்பதில் தமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
விளையாட்டைக் கைவிடுவது அதற்கான தீர்வல்ல” என அவர் தெரிவித்துள்ளார்.

2014 வெற்றிக்கு பின் 12 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், கிரிக்கெட் பற்றி நன்கு அறிந்த உணர்ச்சிமிக்க ரசிகர்கள் இப்போதும் அணியுடன் இருக்கிறார்கள்.

அடுத்த மகுடத்தைச் சூடும் வரை அவர்கள் அணியைத் தொடர்ந்து ஆதரிப்பார்கள் என்றும் மாலிங்க தனது பதிவில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )