
ஓமானிலிருந்து ஒரு விமானம் இலங்கைக்கு வருகை
இன்று (02) அதிகாலை ஓமானின் சலாம் ஏயர் (SalamAir) விமானச் சேவையின் தீர்மானத்திற்கு இணங்க, விமானம் ஒன்று இலங்கைக்கு வருகை தந்து மீண்டும் ஓமானுக்குப் பயணித்துள்ளது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கப்டன் தமிந்த ரம்புவெல்ல இது குறித்துத் தெரிவிக்கையில்:
ஓமான் மற்றும் சவூதி அரேபியாவின் வான்பரப்புகள் தற்போது திறந்த நிலையில் உள்ளன.
எவ்வாறாயினும், ஏனைய வளைகுடா நாடுகளின் வான்பரப்புகள் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே திறக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் மோதல்கள் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த அனைத்து விமானப் பயணங்களும் இன்றைய தினமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
போர் மோதல்கள் ஆரம்பமான கடந்த 28ஆம் திகதி முதல் இதுவரையில், இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த மற்றும் அங்கிருந்து இலங்கைக்கு வரவிருந்த 115 விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

