
யாழ்ப்பாணத்தில் நிறுத்தாமல் சென்ற மணல் கடத்தல் வாகனம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் போலீசாரின் கட்டளையை மீறி சென்ற மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்று மோதியதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பகுதியில் பொலிஸார் வீதித் தடையைஏற்படுத்தி விசேட சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டியுள்ளனர்.
எனினும், பொலிஸாரின் கட்டளையை மீறிய ஓட்டுநர், உழவு இயந்திரத்தை நிறுத்தாமல் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மோதவிட்டுவிட்டு வேகமாக தப்பிச் சென்றுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற ஓட்டுநரைக் கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணப் பொலிஸாரால் விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களின் இத்தகைய செயல்கள் தற்போது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

