
அத்தியாவசியோருக்கே ஒருநாள் அடையாள அட்டை சேவை மீளத் தொடக்கம்
தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ‘ஒருநாள் சேவை’ திட்டம், அத்தியாவசியத் தேவையுடையவர்களுக்காக மட்டும் இன்று (08) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தச் சேவை திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களில் முன்னெடுக்கப்படும் என பதில் பணிப்பாளர் நாயகம் எம். எஸ். பி. சூரியப்பெரும வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், திணைக்களத்தின் கணினி கட்டமைப்பைச் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களில் நடைபெற்று வந்த சாதாரண சேவைகள் மற்றும் முன்வரிசைச் சேவைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கணினி கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பின்னர், அனைத்து சேவைகளும் வழமைபோல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

