
கடந்தகால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட SLPP முன்னோக்கிச் செல்லும் – நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனகட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு கட்சி முன்னோக்கிச் செல்லும் என்று தெரிவித்துள்ளார்.
சுயபரிசோதனை, கலாசாரப் பாதுகாப்பு மற்றும் இளைஞர் வலுவூட்டல் ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இன்று (15) கார்டன் இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு சடங்குகளில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு என்பது எமது பகிரப்பட்ட கலாசார மரபாகும். இதனைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என அவர் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
நாடு ஒரு சவாலான காலத்தை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஒற்றுமை மற்றும் நேர்மறையான கண்ணோட்டத்துடன் இதனை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
தவறுகளிலிருந்து கற்றல்: “எல்லோரும் தவறு செய்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்,” என்று கூறிய அவர், கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் அதேவேளை, சமூகம் கடந்தகாலத் தவறுகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இளைஞர் வலுவூட்டல்: இளைய தலைமுறையினரை வழிநடத்துவதன் அவசியத்தையும், தேசிய அபிவிருத்தியில் அவர்கள் பங்களிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். இளைஞர்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவது கவலைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஒற்றுமை: நாட்டின் வரலாற்றில் ஏற்பட்ட பல்வேறு அமைதியற்ற காலங்களைக் குறிப்பிட்ட அவர், தனிமைப்படுத்தப்பட்ட சில சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தையும் மதிப்பிடக் கூடாது என்றார்.
இலங்கையின் எதிர்காலம் இளைஞர்களின் திறமைகளைப் பயன்படுத்துவதிலும், சிறந்த பாதையை நோக்கிச் செல்வதற்கு தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும் தங்கியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

