
மே 1 முதல் டிஜிட்டல் வாகன காப்பீட்டு அட்டைகள் அறிமுகம்
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் டிஜிட்டல் வாகன காப்பீட்டு அட்டைகளை (Digital Motor Insurance Cards) பயன்பாட்டிற்கு விட எதிர்பார்ப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு (IRCSL), இலங்கை காப்பீட்டு சங்கம் (IASL) மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வாகன காப்பீட்டு முறையை நவீனமயமாக்குதல், தேசிய டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுத்தல் மற்றும் பொதுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் தடையற்ற, காகிதமற்ற (Paperless) மற்றும் திறமையான அனுபவத்தை இது உறுதி செய்யும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் அட்டைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், நாடு தழுவிய ரீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இது பங்களிப்பு செய்யும் என நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

