
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அட்டமஸ்தானத்தின் மடாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் கைது – சிறுமியின் தாயார் விளக்கமறியலில்
அட்டமஸ்தானத்தின் மடாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர், 15 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சுமத்தப்பட்ட தீவிர குற்றச்சாட்டுகளை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, அட்டமஸ்தானத்தின் மடாதிபதி மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஆகியோரை கைது செய்யுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
அனுராதபுரம் மேலதிக நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன, தேரருக்கு எதிராக கடுமையான வெளிநாட்டு பயணத்தடையையும் விதித்ததோடு, அவர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்குமாறு குடிவரவு அதிகாரிகளுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளார்.
சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் கடந்த 2026 மார்ச் 6ஆம் திகதி நிட்டம்புவ பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு ஆரம்பமானது.
ஆரம்பத்தில் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட சிறுமி ராகமவில் உள்ள பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டார்.
இருப்பினும், சிறுமியிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது அவர் ஏற்கனவே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

