
உணவு ஒவ்வாமையினால் 52 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்திலுள்ள பாடசாலையில் சிற்றுண்டிச்சாலையில் நேற்று (11) விற்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 52 மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மாணவர்கள் பாடசாலை இடைவேளை நேரத்தில் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலையில் நூடில்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கரடியனாறு மகா வித்தியாலய தரம் ஆறு முதல் உயர்தரம் வரையிலான 21 ஆண்களும் 31 பெண்களுமாக 52 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மாணவர்களில் மூவர் மயக்கமுற்ற நிலையிலும் ஏனையவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டதன் காரணமாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று உணவு மாதிரிகளை பரிசோதித்து வருகின்றனர்.
கரடியனாறு பொலிஸார் பாடசாலக்குச் சென்று சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கரடியனாறு பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. பாடசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தில் பெற்றோர் மற்றும் பிரதேசவாசிகளின் பிரவேசத்தினால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

