
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய குற்றவாளி நிலந்த ஜயவர்தன பதவி நீக்கம்
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்தன உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ,உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளத
சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நிலந்த ஜயவர்தன அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக செயற்பட்டிருந்ததாகவும் ,இந்த தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளடக்கிய சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.
இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணையில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நிலையில் நிலந்த ஜயவர்தனவை சேவையில் இருந்து நீக்க தீர்மானித்ததாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

