
பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொரளையைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது
பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை பொரளை பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பொரளையை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாகவும் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கனவர்கள் வெளிநாட்டில் இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் சகாக்கள் என தெரிவிக்கப்பட்டதாக நேற்றைய சிங்கள ஊடக செய்திகளில் கூறப்பட்டது . . குழுக்களின் தலைமைகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்களின் சகாக்கள் சுடப்பட்டதாகவும் கூறப்பட்டது
நேற்று முன் தினம் இரவு பொரளையில் உள்ள சஹஸ்புர மைதானத்தில் இளைஞர்கள் குழுவொன்று ,கிரிக்கெட் விளையாட்டிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
சம்பவத்தில் ஐந்து இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
களனியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் நால்வர் பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

