லட்சுமியின் அம்சமான துளசி தேவி

லட்சுமியின் அம்சமான துளசி தேவி

துளசி தெய்வ அம்சம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும். துளசியை துளசி, திருத்துழாய் என்றும் சொல்வார்கள். இந்த சொற்களுக்கு தெய்வீக சக்தி என்பதே பொருளாகும். துளசியில் கருந்துளசி எனும் கிருஷ்ண துளசி, வெள்ளை துளசி, காட்டுத் துளசி எனப் பலரகங்கள் உள்ளன.

பாற்கடலில் அமிர்தம் கடைந்த காலத்தில் விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீதன்வந்த்ரி பகவான் அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார். அப்போது ஏற்பட்ட ஆனந்த மிகுதியால் விஷ்ணுவுக்கு ஆனந்தக் கண்ணீர் வெளிப்பட்டு அதில் சில துளிகள் அமிர்த கலசத்தினுள் விழுந்தது.

அதுவே மரகதப் பச்சை நிறத்தில் ஸ்ரீதுளசி தேவியாக உருவெடுத்தது என்று சொல்வார்கள். அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்ள தேவர்களும் அசுரர்களும் சண்டையிட்ட போது அந்த அமிர்த கலசத்திலிருந்து மேலும் சில துளிகள் பூமியில் விழ அவையே பூமியெங்கும் துளசிச் செடிகளாக உற்பத்தியாயின என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

துளசிதேவி பகவானிடம் பெற்ற வரத்தின்படியே வீட்டில் துளசி மாடம் வைத்து அதற்கு பூஜை செய்பவர்களுக்கும், துளசி பறித்து அதன் திவ்யதளங்களால் விஷ்ணுவை லட்சுமியை அர்ச்சிப்பவர்களுக்கும், இருவரும் சகல சவுபாக்கியங்களையும் தந்து நிறைவில் விஷ்ணு லோகத்திலும் இடம் தந்து அருளுகின்றார்கள்.

நம்மைப் பெற்றெடுத்து வளர்த்து பேணிக்காத்த நம் தாயாரை மதித்துக் காப்பாற்றி அவள் அருளாசிகளைப் பெறுவதும், தந்தையை பக்தி சிரத்தையுடன் உபசரித்து ஆசி பெறுவதும், துளசிச்செடி வைத்து அதற்கு பூஜித்து சேவைகள் புரிவதும் இம்மூன்றும் மனிதருக்கு உத்தம கதியை தரவல்ல சேவைகள் என மகான்கள் கூறி உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )