
6 ஆம் தர சேர்க்கை விண்ணப்ப காலம் நீடிப்பு
05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதலில் இவ்விண்ணப்ப முறைமை டிசம்பர் 05ஆம் திகதிக்கு பின் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்தக் கால எல்லை டிசம்பர் 12ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2025ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு 2026ஆம் ஆண்டுக்கான 6ஆம் தர சேர்க்கை தொடர்பான முதல் கட்ட மேன்முறையீடுகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் பொய்யானவை என்றும் அமைச்சு விளக்கியுள்ளது.
2026ஆம் ஆண்டு 06ஆம் தரத்திற்காக முதல் சுற்றில் பாடசாலைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் ஜனவரி மாதம் பாடசாலைகளில் சேர்க்கப்பட்டதன் பின்னர், இன்னும் நிலவும் வெற்றிடங்களுக்காக இணையவழி மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

