
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ரூ.1,750 அடிப்படை சம்பளத்தை வர்த்தமானியில் வெளியிட வேண்டும்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள 1,750 ரூபாய் அடிப்படை சம்பளத்தை உடனடியாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று (08) நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு அவர் இதனை வலியுறுத்தினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் உறுதியளித்ததன் காரணமாகவே, அதற்கு தாம் ஆதரவாக வாக்களித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், சம்பள அதிகரிப்பை வர்த்தமானியில் அறிவிப்பதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும், மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு துரோகம் இழைக்க வேண்டாம் எனவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

