மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உணவுக் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழு கூடியது

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உணவுக் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழு கூடியது

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை முகாமைத்துவம் செய்வதற்கான, உணவுக் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுவின் விசேட கூட்டம் (06) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பை பேணுவதற்கும், குறிப்பாக வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

உணவு உற்பத்திக்கும், மீன்பிடித் துறைக்கும் முன்னுரிமை அளித்து, எரிபொருளை தொடர்ந்து வழங்குவதற்கு முறையான பொறிமுறையை உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நாட்டின் உணவு உற்பத்திக்குத் தேவையான உரங்கள் மற்றும் விவசாயத்திற்கு அவசியமான இரசாயனப் பொருட்களின் இறக்குமதியின்போது, சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினால், அதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார ஆகியோருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் அடங்கிய உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )