
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு வரி செலுத்தாமல் வெளியே எடுத்துச் செல்ல முயன்ற சுமார் 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இருவர் இன்று (25) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாய் இலிருந்து இன்று அதிகாலை 3.15 மணியளவில் வந்த விமானம் மூலம் இந்த இரு சந்தேகநபர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் கிரீன் சேனல் வழியாகச் செல்ல முயன்றபோது அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் இருந்த 08 பயணப்பொதிகள் சோதனை செய்யப்பட்டபோது, அவற்றுக்குள் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
‘மான்செஸ்டர்’ மற்றும் ‘பிளாட்டினம்’ வகையைச் சேர்ந்த சுமார் 500 சிகரெட் கார்ட்டூன்கள், அதாவது சுமார் 1,00,000 சிகரெட் துண்டுகள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி சுமார் 15 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் டுபாயில் தொழில் புரியும் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

