
21 மணிநேர ஈரான் அமெரிக்க பேச்சுவார்த்தையில் பிறகு, உடன்பாடும் எட்டப்படாததால் அமெரிக்கக் குழு பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறது – ஜே.டி. வான்ஸ்
இஸ்லாமாபாத்தில் 21 மணிநேரம் நீடித்த ஈரான் அமெரிக்க பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஈரானுடன் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் அமெரிக்கக் குழு பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதாக அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் இன்று அறிவித்துள்ளார்.
அணு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்ற அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்க மறுத்ததே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
நாங்கள் உடன்பாட்டை எட்டவில்லை என்பது ஒரு கெட்ட செய்திதான். ஆனால், இது அமெரிக்காவை விட ஈரானுக்குத்தான் மிகவும் மோசமான செய்தி என்று வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ‘சிவப்பு கோடுகள்’ (Red lines) எவை என்பதைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது தான் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் ஆறு முறை தொலைபேசியில் பேசியதாக வான்ஸ் தெரிவித்தார்.
உடன்பாடு எட்டப்படவில்லை என்றாலும், இரு தரப்பு தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆவணங்களைப் பரிமாறிக்கொள்வார்கள் என்றும், எஞ்சியுள்ள கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் ஈரான் அரசு தனது ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளது.
மறைந்த உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் போரில் கொல்லப்பட்டவர்களுக்காக கறுப்பு உடையணிந்து ஈரான் பிரதிநிதிகள் வந்திருந்தனர். மேலும், அமெரிக்கக் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட மாணவர்களின் காலணிகள் மற்றும் பைகளையும் அவர்கள் கொண்டு வந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தோல்வியானது தற்போதைய இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலக எரிசக்தி விநியோகத்தில் 20% பங்கைக் கொண்டுள்ள ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் தொடர்ந்து முடக்கியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி தொடரும் அபாயம் உள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையானது 1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற மிக உயர்மட்ட அளவிலான சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

