
யாழில் துப்பாக்கி முனையில் பெண்கள் அச்சுறுத்தல் ; அருச்சுனா எம்.பி. மீது பரபரப்பு குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுன பெண்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நேற்று (25) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி, குறித்த காணியின் உரிமை விவகாரம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அந்தக் காணி தனக்குச் சொந்தமானது என எம்.பி. கூறி வரும் நிலையில், மற்றொரு தரப்பினரும் அதற்கு உரிமை கோரி வருகின்றனர்.
நேற்றைய தினம் காணியை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த எம்.பி. முன்னிலையில், அங்கு வந்த இரு பெண்கள் காணியின் ஒரு பகுதி தமக்குரியது எனக் கூறி முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, எந்த ஆயுதங்களுமின்றி இருந்த பெண்களை நோக்கி எம்.பி. திடீரென தனது கைத்துப்பாக்கியை எடுத்து மிரட்டியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மீதான இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரதீபன்

