
யாழ் பல்கலை பெண் விரிவுரையாளரின் மரணம்: நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
விசாரணையின் போது உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும், சம்பவத்தை விசாரித்து வரும் பொலிஸாரும் சாட்சியமளித்தனர்.
இதன்போது சாட்சியமளித்த பொலிஸார், விரிவுரையாளரின் மரணம் இயல்பானது அல்ல என்றும், கழுத்து நெரிக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட கொலையே மரணத்திற்கான காரணம் என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் மீதும் பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.
வழக்கின் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து, எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்த நீதிவான், கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோரின் விளக்கமறியல் காலத்தையும் அதுவரை நீடித்து உத்தரவிட்டார்.
பிரதீபன்

