
எரிபொருள் விநியோகஸ்தர்களுடனான கலந்துரையாடல் வெற்றி
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்துள்ள புதிய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (04) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அவர், புதிய சூத்திரம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், விநியோகஸ்தர்களின் பரிந்துரைகளைப் பற்றி கலந்துரையாட மேலும் ஒரு சந்திப்பு வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர், “பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சூத்திரத்தை செயல்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கிடையில், எரிபொருள் விநியோகஸ்தர்கள் சில விடயங்களை முன்வைத்துள்ளனர்.
அந்த விடயங்களை விவாதிப்பதற்காக, புதிய சூத்திரம் செயல்படுத்தப்படும் அதே வேளையில், விநியோகஸ்தர்களின் பரிந்துரைகளுக்கும் செவிசாய்க்கும் வகையில், மீண்டும் ஒரு முறை 18ஆம் திகதி காலையில் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, எரிபொருள் தொடர்பான எந்தப் பிரச்சினையும் இல்லை,” என தெரிவித்துள்ளார்.