
விவசாய காணிகளுக்கான நீர் மார்ச் 15ஆம் திகதிக்கு பின்னர் திறந்துவிடப்படும்
சிறுபோக பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்காக விவசாயக் காணிகளுக்கான நீரை மார்ச் 15ஆம் திகதிக்குப் பின்னர் திறந்துவிடுவது தொடர்பில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் கே.டி.லால்காந்தவின் தலைமையில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
சிறுபோகத்தில் அதிகமான வயல் நிலங்களில் பயிர்ச்செய்கையைத் தொடங்கும் நோக்கில் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர் விவசாயக் காணிகளுக்கான நீர் திறக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து நெல் வயல்களிலும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நெல் வயல் நிலங்கள் நிரப்பப்படும் பிரச்சினை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், “பிடியளவு கம நிலத்திற்கு” திட்டத்தினை விளக்கினார்.
‘பிடியளவு கம நிலத்திற்கு’ திட்டமானது தரிசு நிலங்களில் பயிர்ச்செய்கைக்கான திட்டம் அல்ல என்றும், அந்தந்தப் பிரதேசத்தில் விஞ்ஞான அடிப்படையில் பயிர்ச்செய்கை செய்யக் கூடிய பயிர்களை அடையாளம் காண்டு அந்தப் பிரதேசத்திற்கான விவசாய ஆணையாளரின் அனுமதியைப் பெற்று அந்தப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்நாட்டுக்குத் தேவையான சோளம் குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய 2024ஆண்டு முதல் 2025 ஜனவரி 31ஆம் திகதி வரையில் ஏறத்தாழ 275,000 மெற்றிக்டொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், ஜனவரி 31ஆம் திகதிக்குப் பின்னர் சோளம் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
இருந்தபோதும், 6 இலட்சம் மெற்றிக்டொன் சோளத்திற்கான தேவை இருக்கின்றபோதும், அந்தளவு சோளத்தை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியது என்றும் அமைச்சர் தெரிவித்தார். அதற்கமைய, இடைநிறுத்தப்பட்ட சோள இறக்குமதியை எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் சோளத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் அவசியம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. நாட்டில் சோள உற்பத்தி செய்யப்படும் காணிகளின் அளவை இருபதாயிரம் ஹெக்டெயராக அதிகரிக்க ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்நாட்டின் நீர்ப்பாசன கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் நீர்ப்பாசனப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், 2021/2022 வருடத்திற்கான வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை, 2022ஆம் ஆண்டுக்கான தேசிய அறுவடைக்குப் பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் ஆண்டறிக்கை, 2019ஆம் ஆண்டுக்கான தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் ஆண்டறிக்கை, 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பொறியியல் உசாத்துறை பணியகத்தின் வருடாந்த அறிக்கை, 2023ஆம் ஆண்டுக்கான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை, 2023ஆம் ஆண்டுக்கான நீர்ப்பாசன அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை, 2023ஆம் ஆண்டுக்கான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை, 2019 ஆண்டுக்கான கமல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை ஆகியன குறித்தும் குழுவில் ஆராயப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க, குழு உறுப்பினர்கள் உள்ளடங்களான ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.