
போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த ரூ. 17.5 மில்லியன் பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் வருகைதந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் நேற்று (09) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய கனேடிய இளங்கலை பட்டம் பெறவிருக்கும் மாணவி ஆவார்.
அவர் கனடாவின் டொராண்டோவிலிருந்து இந்த போதைப்பொருளுடன் அபுதாபிக்கு வந்து, அங்கிருந்து, இரவு 8.35 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் விமானமான EY-396 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் 3 போர்வைகளில் சுற்றப்பட்ட 17 கிலோ கிராம் 573 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் போதைப்பொருள் பொருட்களுடன் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.