
ஏழுமலையானின் 7 வித சிறப்புகள்
திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதியை தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். திருப்பதி சென்றால் தங்கள் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்று கருதும் மக்கள் அங்கு சென்று வழிபாட்டை செய்கிறார்கள். இந்த திருப்பதி திருமலையில் 7-ஆக அமைந்த சில சிறப்புக்குரிய விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஏழு மலைகள்
திருவேங்கடவன் என்று அழைக்கப்படும் வெங்கடாஜலபதி, சப்தகிரி என்று அழைக்கப்படும் 7 மலைகளின் மீது கோவில் கொண்டிருக்கிறார். அந்த ஏழுமலையின் பெயர்கள்:- கருடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி ஆகியவையாகும்.
ஏழு நாமங்கள்
பெயரற்ற பரம்பொருளாகவும், அடியார்களால் பல்வேறு நாமங்களால் அழைக்கப்படுபவராகவும் இருப்பவர், திருமலைவாசன். ஆனாலும் அவருக்கு முக்கியமான ஏழு பெயர்கள் இருக்கின்றன. அவை: ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி ஆகியனவாகும்.
ஏழு தீர்த்தங்கள்
திருப்பதியில் உள்ள முக்கியத்துவம் பெற்ற தீர்த்தங்கள் 108 இருந்தாலும், அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக ஏழு தீர்த்தங்கள் உள்ளன. அவை:- குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், சுவாமி புஷ்கரணி என்பவை ஆகும்.
ஏழு தலை ஆதிசேஷன்
ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனது ஏழு தலைகள்தான், திருப்பதியின் ஏழுமலையாக விளங்கி வருவதாக ஐதீகம். இங்கு நடைபெறும் பிரமோற்சவத்தில் கொடியேற்றத்திற்கு பிறகு வேங்கடவன் ‘பெரியசேஷ வாகனம்’ என்ற ஏழு தலை நாக வாகனத்தில் திருவீதி உலா வருவது வழக்கம்.
ஏழு கலச ராஜகோபுரம்
திருவேங்கடவன் சன்னிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்திற்கு சப்த லோகங்களுடனும் தொடர்பு கொள்வதுபோல ஏழு கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏழு முக்கிய இடங்கள்
கோவிந்தராஜர் சன்னிதி, பூவராக சுவாமி சன்னிதி, திருச்சானூர் கோவில், ஸ்ரீபேடி ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீவாரி சிகர தரிசனம், சிலாதோரண பாறைகள், ஸ்ரீவாரி பாதாள மண்டப கோவில் ஆகியவை திருப்பதியில் நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய இடங்களாக விளங்குகின்றன.
ஏழு மகிமைகள்
திருமலைவாசனின் பெருமைக்கு அணிகலனாக ஏழு மகிமைகள் உள்ளன. அவை:- ஸ்ரீனிவாச மகிமை, ஷேத்திர மகிமை, தீர்த்த மகிமை, பக்தர்கள் மகிமை, கோவிந்த நாமத்தின் மகிமை, பகுளாதேவியின் மகிமை, பத்மாவதியின் மகிமை ஆகியவையாகும்.