
யார் இந்த பெஞ்சமின் நெதன்யாகு ?
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் 1949 ஆம் ஆண்டு பெஞ்சமின் நெதன்யாகு பிறந்தார்.
1963 ஆம் ஆண்டு பெஞ்சமின் நெதன்யாகு தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். பின்னர் தனது 18-வது வயதில் இஸ்ரேலுக்கு திரும்பி 5 வருடங்கள் இராணுவத்தில் சேவை யாற்றினார் .
பின்னர் அமெரிக்காவுக்கு திரும்பி இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்று மீண்டும் தனது தாய் நாட்டுக்கு திரும்பினார்.
1982 ஆம் ஆண்டு வாஷிங்டனில் இஸ்ரேலின் துணை தூதராக கடமை ஆற்றிய இவர் 1984 ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஐநாவில் இஸ்ரேலின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து 1988 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு திரும்பிய நெதன்யாகு தேர்தலின்போது லிகுட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
1996 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் யிட்சாக் ராபின் கொலை செய்யப்பட்ட பின்னர், நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக 1999 ஆண்டு வரை பதவியில் நீடித்தார்.
பின்னர் இரண்டாவது முறையாக 2009 ஆம் ஆண்டு முதல் 2021 வரை தொடர்ச்சியாக நான்கு முறை இஸ்ரேலின் பிரதமராக பதவியேற்றார்.
2017 ஆம் ஆண்டு இஸ்ரேலின் முக்கிய நகரமான ஜெருசலேமை அமெரிக்கா ஆதரவுடன் மீட்டெடுத்து இஸ்ரேலின் தலைநகராக மாற்றினார்.
இதனையடுத்து ஆறாவது முறையாக 2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமராக பதவி வகிக்கிறார்.
பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுடனான இஸ்ரேலின் உறவில் ஒரு முக்கியமான மற்றும் சிக்கலான நபராக இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளது .
இரு நாடுகளுக்குமிடையிலான உறவு நீண்டகாலமாகவே இருந்து வருகின்ற போதிலும் நெதன்யாகுவின் தலைமையின் கீழ் இரு நாட்டு உறவு பல ஏற்றத்தாழ்வுகளை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
இஸ்ரேலின் முக்கிய கவலையாக இருக்கும் ஈரானின் அணுசக்தி திட்ட விவகாரத்தில் அமெரிக்காவின் அணுகுமுறையுடன் நெதன்யாகு பல கருத்து வேறுபாடுகளையும் ஒப்புதல்களையும் கொண்டுள்ளதை இன்றுவரை காணமுடிகிறது .
அதேபோன்று இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதல் மற்றும் இருதரப்புத் தீர்வு குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கும், நெதன்யாகு அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் இடையே சில நேரங்களில் கருத்து வேறுபாடுகளும் ஒப்புதல்களும் உள்ளமையை காணக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில் இன்றைய பதற்ற சூழலிலும் அமெரிக்காவுடன் சில கருத்து வேறுபாடுகளையும் ஒப்புதல்களையும் கொண்ட போதிலும்
அமெரிக்காவின் ஆதரவை பெற்றவராக பெஞ்சமின் நெதன்யாகு செயற்படுகின்றமையை அவதானிக்க முடிகிறது.
ஈரானின் அணுசக்தி திட்டம் இஸ்ரேலுக்கு பெரும் அச்சுறுத்தல் என நெதன்யாகு தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த நிலையில் அது இன்றளவில் வலுப்பெற்று , போராக மாறியுள்ளது
மறுபக்கத்தில் பாலஸ்தீன இஸ்ரேல் மோதலால் பல இஸ்லாமிய நாடுகள் நெதன்யாகுவிற்கு எதிராக பரவலான கண்டனங்களை தெரிவித்து வருவதையடுத்து பல இஸ்லாமிய நாடுகளுடன் இஸ்ரேலின் உறவு மீள முடியாத சிக்கலுக்குள்ளாகி வருகின்றது .
இஸ்ரேலிய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று தெரிவித்து இஸ்ரேல் ஈரான் மீது கடந்த 13 ஆம் திகதி (2025) தாக்குதல் நடத்தியுள்ளது.
ஒரு தொலைக்காட்சி அறிக்கையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு,
இஸ்ரேலின் நலன் கருதி ஈரானின் அச்சுறுத்தலை முறியடிக்க இலக்கு வைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியை கொன்றால் மோதல் முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ளது.

