
கொள்கலன்கள் தொடர்பான அறிக்கையை சபையில் சமர்ப்பித்த முஜிபுர் ரஹ்மான்
கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் இன்று (30) பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சமர்ப்பித்துள்ளார்.
அரசாங்கம் இந்தக் குழுவின் அறிக்கையை இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் மறைத்து வைத்திருந்ததாகவும், தான் இந்தக் குழுவின் அறிக்கையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரித்தார்.
மேலும் அவர் ”அவதானம் என்ற வகைப்பாட்டின் கீழ் கட்டாய சோதனைக்கு உட்படுத்த வேண்டிய சிவப்பு முத்திரை பதித்த 151 கொள்கலன்களில் 37 கொள்கலன்கள் எந்தவொரு சோதனைக்கும் உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டதாக குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த சிவப்பு முத்திரை பதித்த கொள்கலன்களை விடுவிக்கும்போது கட்டாயமாக சோதனை செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.
அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 37 கொள்கலன்களும் சோதனை செய்யப்பட வேண்டியவை என்ற குறிப்பை இணைத்துள்ள போதிலும், அவைகள் எந்தவொரு சோதனையும் செய்யாமல் விடுவிக்கப்பட்டதையும் குழு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
சோதனை செய்யப்பட வேண்டிய 103 கொள்கலன்கள் எந்தவொரு சோதனையும் இன்றி விடுவிக்கப்பட்டதாகவும், கொள்கலன்களை விடுவிப்பதற்கான தீர்மானம் ஜனவரி 18 ஆம் திகதி எடுக்கப்பட்டாலும், அந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் ஜனவரி 17 ஆம் திகதி இரண்டு கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

