
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் திறந்து வைப்பு
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்றது.
இந்த வெளிநோயாளர் பிரிவுக் கட்டடம் திரு. திருமதி சிவப்பிரகாசம் வாசன் ஜெசிந்தா தம்பதியரின் திட்ட உருவாகத்தில், புலம்பெயர் தேசத்தில் வாழும் நயினாதீவு உறவுகள் மற்றும் ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்க வாறன்டோர்ப் கிளையின் நிதிப் பங்களிப்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் அனுசரணையுடன் இலங்கை கடற்படையின் கட்டுமானத்தில் அமையப்பெற்றது.

புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தில் அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், ஊசி போடும் அறை, பல் மருத்துவ பிரிவு, தாதியர்களுக்கான ஓய்வறை, ஈசிஜி பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு, முதன்மை பராமரிப்பு பிரிவு மற்றும் சுகாதார வசதிகளும் அமைந்துள்ளன.

சுகாதார அமைச்சராக யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு தான் மேற்கொண்ட முதல் விஜயம் இது என்றும், அங்கு தான் பார்வையிட்ட முதல் மருத்துவமனை நயினாதீவு மருத்துவமனை என்றும் அமைச்சர் முதலில் நினைவு கூர்ந்தார்.
நாடு முழுவதும் இதுபோன்ற பிராந்திய சுகாதார மையங்களை நிறுவுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான விரிவான திட்டம் கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்தக் கட்டடம் 66 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், தளபாடங்கள், மருத்துவ உபகரணங்கள் என்பன நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபை, சுகாதாரத் திணைக்களம் மற்றும் நலன்விரும்பிகளினாலும் வழங்கப்பட்டுள்ளன.

