
யாழில் மாதா சிலையை நொறுக்கிய கும்பல் ; 8 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் மது போதையில் மாத சொரூபத்தை அடித்து உடைத்து, தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் அரசியல் கட்சி ஒன்றின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா தேவாலயத்தில் இருந்த சுமார் ரூ. 50 இலட்ச பெறுமதியான மாதா சிலையை அடித்து உடைத்து உள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தேவாலயத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை (25) அரசியல் கட்சியின் தீவக அமைப்பாளரின் தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் தேவாலயத்தினுள் அத்துமீறி மதுபோதையில் , இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் ரூ. 50 இலட்சம் பெறுமதியான மாதா சிலையை அடித்து உடைத்து, தள்ளி விழுத்தியுள்ளனர். அத்துடன், தேவாலயத்தினுள் காணப்பட்ட ஏனைய பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தேவாலய நிர்வாகத்தினரால், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அரசியல் கட்சியின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்னர்.
கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
பிரதீபன்

