
மியான்மரில் முடிவுக்கு வரும் இராணுவ ஆட்சி
மியான்மரில் கடந்த 2020-ல் நடைபெற் தேர்தலில் மோசடி நடந்ததாகக்கூறி 2021-ம் ஆண்டு அரசைக் கலைத்துவிட்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
அவசர நிலையை அறிவித்து இராணுவத் தளபதி மின் ஆங் ஹிலியாங் அதிகாரத்தை கைப்பற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.
அப்போது போராட்டக்காரர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், இராணுவ ஆட்சித்தலைவர் மின் ஆங் ஹிலியாங் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
”தேர்தலில் மோசடி நடைபெற்றதால்தான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. எனவே நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்படும். இதனால் அடுத்த 6 மாதங்களுக்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 4 ஆண்டாக உள்ள ராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

