
உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பு மிகவும் சிறந்ததாக” இருந்தது என உக்ரைன் ஜனாதிபதி செலேன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில், உக்ரைன் பாதுகாப்பு நிலைமை, ஐரோப்பிய நட்டு நாடுகளுடன் இணைந்த ஒத்துழைப்பு, உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான தற்போதைய பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் தொலைபேசியில் உரையாடியதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நேரடி சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் இந்த சந்திப்பு குறித்து கூறுகையில்,
“பல நல்ல விவாதங்களையும், நல்ல பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்தோம். பல வழிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.
மேலும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் “குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், இரு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பிற்கான ஏற்பாடுகளைத் ஆரம்பிக்குமாறு கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து புட்டினுடன் கலந்துரையாட விரும்புவதாக டிரம்ப் கூறினார்.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், ஜேர்மன் சான்சிலர் பிரீட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்களும் கலந்துகொண்டனர்.

