
சட்டவிரோத வாகன இறக்குமதி : நகரசபையின் முன்னாள் தலைவர் கைது
சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர பண்டார மற்றும் அவரது நண்பர் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் விரிவான விசாரணையைத் தொடர்ந்து இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு சொகுசு ஜீப்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் வாகனங்களைப் பதிவு செய்வதற்காக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவுகளை மாற்றியமைத்துள்ளதாகவும் இதற்குத் திணைக்கள ஊழியர் ஒருவரின் உதவி செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரான ரவீந்திர பண்டார, 2018 உள்ளூராட்சித் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனவின் கீழ் நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது சந்தேக நபரான லக்ஷித மனோஜ் வீரபாகு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் நெருங்கிய நண்பர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட இரண்டு ஜீப்களும் மேலதிக விசாரணைக்காக மணிக்கின்ன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

