
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு விசேட பயிற்சித் திட்டங்கள்
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு விசேட பயிற்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக கிளீன் ஸ்ரீலங்கா செயலகம் அறிவித்துள்ளது.
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சரியான சேவைகள் வழங்கப்படுவதில்லையெனவும் சேவை வழங்குநர்களிடையே பெரும்பாலும் குறைபாடுகள் உள்ளதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்தார்.
சுற்றுலா பயணிகளுக்கான போக்குவரத்துச் சேவையை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர் , சரியான போக்குவரத்து சேவைகள் இன்றி சுற்றுலாப் பயணிகள் சிரமப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
நியாயமற்ற முறையில் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவங்கள் ஏற்பட்டு வருவதை ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுகீஸ்வர சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நடைமுறைகள் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியைத் பாதிக்கும் எனவும் இலங்கையின் நற்பெயருக்கு இது களங்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வாக, சுற்றுலாத் துறையில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
முதல் கட்டமாக, நாடு முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு போக்குவரத்து சேவை வழங்கும் 10,000 முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும் எனவும்
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வரர் தெரிவித்தார்.

