
உலக வர்த்தக அமைப்பில் இலங்கையின் 5வது வர்த்தகக் கொள்கை மதிப்பாய்வு ஆரம்பம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பில் (WTO) இலங்கையின் 5வது வர்த்தகக் கொள்கை மதிப்பாய்வு (TPR) நேற்று (15) ஆரம்பமாகியது.
இந்த அமர்வு ஒக்டோபர் 17 ஆம் திகதி வரை இடம்பெறுவதுடன், வர்த்தகம், வரி, சேவைகள் மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தி, பொருளாதார அபிவிருத்தி இலக்குகள் குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடலை மேற்கொள்ள இலங்கைக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் முன் மதிப்பாய்வு செய்வது ஒரு பெறுமதி வாய்ந்த வாய்ப்பாகும்.
மேலும் பலதரப்பு வர்த்தக அமைப்பில் இலங்கை மீண்டும் ஈடுபடுவதற்கான ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உட்பட புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து இந்தக் கொள்கை மதிப்பாய்வு முதல் வர்த்தகக் கொள்கை மதிப்பாய்வாகும்.

