
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு பெப்ரவரி 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பெப்ரவரி 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (18) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவதுருகொட முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ,வழக்கு தொடர்பான சில ஆவணங்களை வழக்கறிஞர்களிடம் சட்டமா அதிபர் ஒப்படைத்தார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிபதி, பெப்ரவரி 16 ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.
நாட்டில் ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாகக் கூறி, இந்திய கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று அவநம்பிக்கையை ஏற்படுத்தியதாக கூறி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த தற்போதைய அமைச்சர் வசந்த சமரசிங்க தாக்கல் செய்த முறைப்பாட்டை , பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரித்து, சட்டமா அதிபரிடம் கோப்புகளை சமர்ப்பித்தது.
இதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டமா அதிபர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது

