
கொஹுவளை துப்பாக்கிச்சூடு ; நால்வர் கைது
கொஹுவளை போதியவத்தை பகுதியில் இளம் பெண்ணை சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிசைப் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால், நேற்று (03) தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பின்னர் கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்செயலில் தொடர்புடையதாக, மோட்டார் சைக்கிளை செலுத்தியவர், துப்பாக்கிக்குப் பொறுப்பாக இருந்தவர், துப்பாக்கியை எடுத்துச் சென்றவர் மற்றும் குற்றவாளிகளுக்கு தங்குமிட வசதி செய்து கொடுத்தவர் என நான்கு பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேக நபர்களிடமிருந்து 3 ரிவோல்வர் ரக துப்பாக்கிகள், 9 மி.மீ ரகத்தைச் சேர்ந்த 10 தோட்டாக்கள், 50 கிராம் ஹெரோயின், 55 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

