
மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (10) இடம்பெற்ற சம்பவங்களில், மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குச்சவெளி – பள்ளிமுனை பகுதியில், நேற்று காலை மின்சாரம் தாக்கி 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குச்சவெளி பகுதியைச் சேர்ந்த இந்த சிறுவன், சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார கம்பியில் சிக்கிய ஆடு ஒன்றை காப்பாற்ற முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ரஸ்நாயக்கபுர – தலாகொலவேவ பகுதியில் மின்சாரம் தாக்கி 75 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வன்னி – ரஸ்நாயக்கபுர பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குகளிடமிருந்து தனது பயிர்களைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார கம்பியில் மின்சாரம் தாக்கியே இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரஸ்நாயக்கபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

