
பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து ; நால்வர் பலி
கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற கோர விபத்தில், தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில், முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்துடன், முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கார் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது காருக்குள் சிக்கிய நிலையில் இருந்த இருவரது சடலங்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 32, 34 மற்றும் 46 வயதுடையவர்களே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மற்றொரு நபர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

