
கிரீன்லாந்தை பாதுகாக்க அமெரிக்காவால் மட்டுமே முடியும்
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் (World Economic Forum) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், “கிரீன்லாந்தை பாதுகாக்க அமெரிக்காவால் மட்டுமே முடியும். வேறு எந்த நாடும் கிரீன்லாந்தை பாதுகாக்க இயலாது.
கிரீன்லாந்தை நாங்கள் பாதுகாத்து பின்னர் அதை டென்மார்க்கிடம் வழங்கினோம். அது நாங்கள் செய்த ஒரு முட்டாள்தனமான செயல். இப்போது கிரீன்லாந்து மக்கள் எங்களுக்கு நன்றி உணர்வுடன் இல்லை” என தெரிவித்தார்.
மேலும், கிரீன்லாந்துக்கு எதிராக படைபலத்தை பயன்படுத்த மாட்டேன் எனவும் அவர் உறுதியளித்தார்.
அமெரிக்க ஜனாதிபதிகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக கிரீன்லாந்தை வாங்க முயற்சி செய்து வருவதாக குறிப்பிட்ட டிரம்ப், பனியால் சூழப்பட்ட இந்த மாபெரும் நிலப்பரப்பை அமெரிக்காவால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்றும் கூறினார்.
இது நேட்டோவுக்கு விடுக்கும் மிரட்டல் அல்ல என்றும், நிதானமாக சிந்தித்தால் இதை யாராலும் மறுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
நேட்டோ தொடர்பாக கருத்து தெரிவித்த டிரம்ப், “நாங்கள் நேட்டோவிற்கு அளவுக்கு அதிகமாக நிதி வழங்குகிறோம். ஆனால் அதற்கு பதிலாக குறைந்த பயன்களையே பெறுகிறோம். நான் பல ஆண்டுகளாக நேட்டோவை விமர்சித்து வந்துள்ளேன். இருப்பினும், வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியையும் விட நேட்டோவிற்கு அதிகமாக நிதியுதவி வழங்கியவன் நானே” எனவும் தெரிவித்தார்.

