
நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட குளிரான காலநிலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.
நுவரெலியாவின் பல பகுதிகளில் அதிகாலை நேரங்களில் துகள் உறைபனிப் பொழிவும், பகல் நேரங்களில் உஷ்ணமான காலநிலையும், மாலை வேளைகளில் பனிமூட்டமும் காணப்படுகிறது.
இடையிடையே மாறுபடும் இந்த குளுகுளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியுடன் ஈர்த்துள்ளது.
இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
இதன் காரணமாக நுழையும் பிரதான வீதிகளில் சில நேரங்களில் வாகனங்கள் நீண்ட அணிவகுப்பாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை முதல் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்ததுடன், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நுவரெலியாவில் உள்ள அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் பெருந்திரளாகக் காணப்பட்டனர்.
குறிப்பாக, விக்டோரியா தாவரவியல் பூங்கா, பழமையான பிரதான அஞ்சல் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், நுவரெலியா–பதுளை பிரதான வீதியோரில் அமைந்த கிரகரி வாவி பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காலை முதலே குவிந்தனர்.

