
நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றுக்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம்
நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றுக்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜீத் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியபோதே இச்சட்டமூலங்கள் குறித்து ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
2026.01.09ஆம் திகதி நடத்தப்பட்ட குறித்த குழுக் கூட்டத்தில் இச்சட்டமூலங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இதில் உள்ளடக்கப்பட வேண்டிய திருத்தங்கள் சில தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவது, அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொள்வது அவசியம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதற்கு அமைய கடந்த 22ஆம் திகதி இந்தக் குழு மீண்டும் கூடியபோது குறித்த சட்டமூலங்கள் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் ஊடாக சர்வதேச கடல் எல்லையில் இடம்பெறும் அபாயகரமான அவுடதங்களின் கடத்தல்கள் மற்றும் உற்பத்திச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் திருத்தப்பட்டு புதிய சட்ட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இக்கூட்டத்தில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, சந்தன சூரியஆரச்சி, எம்.கே.எம்.அஸ்லம், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜீ.டி.சூரியபண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

