
ஜனாதிபதி செயலகம் முன் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சத்தியாக்கிரகம்
தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று (27) பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
இன்று காலை, போராட்டக்காரர்கள் “நீதியின் மரணம்” எனக் குறிப்பிட்டு சவப்பெட்டியொன்றை எரித்ததுடன், அதனை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக நடைபாதை தடைப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததை அடுத்து, இரு தரப்புகளுக்கிடையில் தர்க்க நிலை உருவானதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைகளில் கடந்த 7 வருடங்களாக கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று (26) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.
எனினும், இதுவரை முறையான பதில் எதுவும் கிடைக்காத நிலையில், போராட்டக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

